×

1000 கோடி கடன் பெற்ற தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்.. சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள் துன்புறுத்தப்படுகின்றனர் : நீதிபதிகள் வேதனை

மதுரை, :வங்கிக்கடன் தொகை வசூலிப்பதை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்ததை திரும்ப பெறக் கோரிய வழக்கில், பணம் கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்றது என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு

பெரம்பலூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:- திருச்சி சின்னக்கடை வீதியில் உள்ள தனியார் வங்கியில் (ஃபெடரல் வங்கி) நீண்ட கால கடனாக ரூ.50 லட்சம் மற்றும் வீட்டுக்கடனாக ரூ.15 லட்சம் விவசாய நிலங்களை அடமானம் வைத்து கடன் பெற்றேன். இதில் வீட்டுக் கடனுக்காக ரூ.18 லட்சமும், நீண்ட கால கடன் தொகையில் ரூ.25 லட்சமும் செலுத்தப்பட்டுள்ளது.

தொழில் நிலைமை சரியில்லாததால் வங்கியில் சரிவர பணம் கட்ட முடியாத காரணத்தினால் எனது விவசாய நிலத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை தனியார் வங்கி மேற்கொண்டது. விவசாய நிலத்தை விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ரூ.75 லட்சம் பணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் ரூ.75 லட்சத்திற்கான வரைவு காசோலையை சென்னையில் உள்ள தனியார் வங்கி மேலாளரிடம் கொடுப்பதற்காக அக்.7ம் தேதி வங்கிக்கு சென்றபோது, வங்கி மேலாளர் அதனை வாங்க மறுத்து எங்கள் மீது வீசி எறிந்தார்.நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் விவசாய நிலத்தை தனியாரிடம் ஒப்படைத்து பணம் வசூலிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள் வேதனை

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வங்கிகள் பணம் வசூலிக்க 3 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும், அவர்கள் அளிக்கும் பதிலை வைத்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும், அதன் பின்பே நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்தார். முக்கியமாக, பணம் கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்றது. எந்த விதிகளின் அடிப்படையில் வங்கிகள் கடன் தொகை வசூலிப்பதை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர். தனியார் நிறுவனங்கள் குண்டர்களை வைத்து கடன் தொகை வசூலிக்கின்றனர். இவ்வாறு செய்வதற்கு வங்கிகள் கடன் வழங்காமல் இருக்கலாம்.

ரூ.1000 கோடி கடன் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். சிறு கடன்கள் வாங்கிய ஏழைகளை பணம் வசூல் செய்கிறோம் என்று கூறி துன்புறுத்தப்படுகின்றனர்.இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்ற உத்தரவை மதிக்க முடியாது எனக் கூறி வரைவு காசோலையை தூக்கி எறிந்த சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.அந்த வங்கி மேலாளர் காணொலிக் காட்சி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிச.1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Tags : poor ,Judges , Small loans, judges, pain
× RELATED ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும்...