×

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதால் வீட்டுக்கு வராத மருத்துவர் மீது குடும்ப வன்முறை வழக்கு :ஐகோர்ட்டில் மனைவி கண்ணீர்

புனே : கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வீட்டுக்கே வராத மருத்துவர் மீது புனேயில் குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்விவகாரத்தில், மன அழுத்தத்திற்குள்ளான பேராசிரியை மனைவியின் இவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த நுண்ணுயிரியல் பேராசிரியைக்கும், மருத்துவர் ஒருவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர், கொரோனா முன்களப் பணியாளராக உள்ளதால் தினமும் 18 மணி நேரத்திற்கு மேலாக மருத்துவப் பணிகளில் ஈடுபட்டுவிட்டு வீடு திரும்புவார். இதனால், குடும்பத்தில் தம்பதியருக்குள் இடைவெளி ஏற்பட்டது. தொடர் பணிச்சுமையின் காரணமாக, மனைவியுடன் பேசுவதை கூட குறைத்துக் கொண்டார்.

இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான பேராசிரியை, தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து போலீசார் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மருத்துவர் மீது கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மகாராஷ்டிரா உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் எம்.எஸ்.கார்னிக் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. காணொலி காட்சி மூலம் நடந்த விசாரணையில் பேராசிரியையிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கண்ணீருடன் பேசுகையில், ‘மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இருந்து கொரோனா பரவல் காரணமாக என் கணவர் பல மருத்துவமனைகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

இதனால், எனக்குள் மன அழுத்தமும், ​பதற்றமும் அதிகமாகிவிட்டது. எனக்குள் அவர் மீது தவறான புரிதல்கள் ஏற்பட்டன. இருப்பினும், சிறப்பு ஆலோசனைக்குப் பிறகு, இருவரும் மீண்டும் ஒன்றாக வாழ முடிவு செய்துள்ளோம்’ என்றார். அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இருவரும் தவறான புரிதல்களால் பிரிந்து இருந்தீர். தற்போது மீண்டும் இணைந்துள்ளதால் நீதிமன்றம் மகிழ்ச்சி அடைகிறது. தனிப்பட்ட வாழ்க்கையையும், குடும்பத்தையும் பிரிந்து கொரோனா நெருக்கடியில் மருத்துவர்கள் இரவும் பகலும் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் மிகுந்த மரியாதை உடையவர்கள்’ என்றனர். இதன்பின்னர், இரு தரப்பினரின் ஒப்புதலுக்குப் பிறகு, நீதிமன்றம் எப்ஐஆரை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.


Tags : doctor ,home ,corona victims , Corona, Doctor, Domestic Violence,: Icord, Wife, Tears
× RELATED பூசணி விதையின் பயன்கள்!