பெரம்பூர்: புளியந்தோப்பு நாராயணசுவாமி இரட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த எம்ரோஸ் (107), திருமணமாகாதவர். தனியாக வசித்து வரும் இவரது வீட்டை சுற்றி நேற்று முன்தினம் தண்ணீர் சூழ்ந்தது. வயது முதிர்வு காரணமாக இவர் வேறு இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்தார். தகவலறிந்த புளியந்தோப்பு போலீசார், எம்ரோசை மீட்டு புயல் நிவாரண மையத்தில் தங்க வைத்தனர். அதே பகுதியை சேர்ந்த சையது அன்சார் (70) மற்றும் மனோகர் (56) ஆகிய இருவரையும் மீட்டு புயல் நிவாரண மையத்தில் தங்க வைத்தனர். இதில் உதவி ஆய்வாளர் அரிகரபுத்திரன், 107 வயது முதியவரை தூக்கி செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.