புதுடெல்லி: டெல்லியின் கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட இடங்களில் வீடு வீடாக சென்று சோதனை நடத்தி கொரோனா பாதித்தவர்களை கண்டறிவது மற்றும் தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொண்டதில் 1,178 பேருக்கு தொற்று பாசிட்டிவ் கண்டறியப்பட்டது. அதாவது தொற்று பாசிட்டிவ் விகிதம் 6.4சதவீதமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் கோவிட் பரவலின் மூன்றாம் அலை தொடங்கியது முதல் நகரில் தினசரி தொற்று பாதிப்பு சராசரியாக 6,000 க்கு குறையாமல் பதிவாகி வருகிறது. இதையடுத்து, கட்டுப்பாட்டு மண்டலங்கள்மற்றும் மக்கள் திரள் அதிகமுள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் கடந்த நவம்பர் 15 ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்ட உயர் மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இதன்ஒரு பகுதியாக, 5 நாட்களாக நகரின் கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 57 லட்சத்திற்கும் அதிகமான மக்களை உள்ளடக்கிய இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 13,560 நோய் அறிகுறியுள்ள நபர்கள் அடையாளம் கணாப்பட்டனர். அவர்களில் 11,790 பேர் பரிசோதிக்கப்பட்டனர். அதோடு அறிகுறியுள்ள 8,413 பேரின் தொடர்புகள் தடமறிந்து கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 6,546 பேர் பரிசோதிக்கப்பட்டனர். ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் மொத்தம் 18,336 பேருக்கு நடத்தப்பட்டன. அவற்றில் 1,178 பேருக்கு தொற்று பாசிட்டிவ் முடிவுகள் வந்ததாக டெல்லி அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், தென்மேற்கு மாவட்டத்தில் தான் அதிக எண்ணிக்கையில் (3,796) அறிகுறி கண்டறியப்பட்டதாக கணக்கெடுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று, கிழக்கு டெல்லி மவட்டத்தில் 2,744, வடமேற்கு 1,957 மற்றும் மேற்கு 1,330 பேருக்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டது.
மத்திய மாவட்டத்தில் அதிகபட்சமாக நோய் தொற்று பாசிட்டிவ் 288 ஆக பதிவானது. அதேபோன்று புதுடெல்லியில் 275, மேற்கு 197, தென்மேற்கில் 196 மற்றும் தென்கிழக்கு டெல்லியில் 118 ஆக பதிவாகின. நோய் தொற்று பாசிட்டிவ் விகிதம் எதிர்பார்த்ததை விடவும் குறைவாக இருந்தது. அதாவது தொற்று பாசிட்டிவ் விகிதம் குறைந்து கொண்டு வருகிறது. எனவே, இந்த கணக்கெடுப்பு முடிவுகளை ஆழமாக பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று அந்த அதிகாரி கூறினார். டெல்லியில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 5,246 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்படி நோய் பாசிட்டிவ் விகிதம் 8.49 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த அக்டோபர் 28ம் தேதிக்குப் பிறகு மிகக் குறைவான எண்ணிக்கையாக பதிவானது. மேலும் 99 பேர் கொரோனாவால் பலியாகினர். இதன்மூலம் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை புதன்கிழமை 8,720 ஆக உயர்ந்நதது.
மேலும், ஐந்து நாட்களுக்குப் பிறகு, தேசிய தலைநகரில் நேற்று முன்தினம் 100 க்கும் குறைவாக உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது. முன்னதாக, கடந்த நவம்பர் 19 அன்று 98 பேரும், நவம்பர் 20 அன்று 118 பேரும், நவம்பர் 21 அன்று 111, நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தலா 121, நவம்பர் 24 அன்று 109 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.