சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: நிவர் புயலால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பாதிப்புகளை சரி செய்யவும், சரி செய்ய முடியாத பயிர் சேதங்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாகவும், காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு அரசு உதவிகள் மூலமாகவும் போதிய இழப்பீடுகளை பெற்றுத் தர வேண்டும். வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு தேவையான பொருளாதார உதவிகளையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.
சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை வழங்கவும், அனைத்துப் பகுதிகளிலும் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பாமகவினர் நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்துகிறேன்.