திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தை சேர்ந்த அகூர் பஞ்சாயத்து மக்கள் திருத்தணி முருகன் கோயிலில் உற்சவர் முருகப்பெருமானை சுமந்து செல்லும் சுமை தாரர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு என்று வருடத்திற்கு ஒரு முறை இந்த பஞ்சாயத்து பகுதியில் உற்சவர் முருகப்பெருமானை எடுத்து வந்து இந்த பஞ்சாயத்தில் உள்ள ரெட்டி குளம் மண்டபத்தில் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள். இந்த கிராமத்தில் இந்த நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். இது பல ஆண்டு காலமாக இருந்து வந்துள்ள ஒரு பழக்கம். மேலும் பழமையான இந்த மண்டபத்தில் வருடத்திற்கு ஒரு முறை தான் நிகழ்ச்சி என்பதால் யாரும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. அந்த பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு சிலர் நடமாட்டம் இருப்பதை கண்ட அந்த பஞ்சாயத்து மக்கள் அந்த பகுதிக்கு நள்ளிரவு விரைந்து சென்றுள்ளனர்.
அப்போது அந்த மண்டபத்தில் இருந்த 3 மர்ம நபர்கள் மண்டபத்திற்கு மையப்பகுதிக்கு ஓரமாக 15 அடிக்கு ஆழம் தோண்டுவதை ஊர்மக்கள் மறைந்திருந்து பார்த்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் ஒன்று திரண்டு இந்த மர்ம நபர்களை பிடிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். அப்போது இந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அப்பகுதியிலிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இதில் சிக்கிய ஒருவன் ஊர் மக்களிடம் குடிபோதையில் உளறி உள்ளான். உடனடியாக ஊர்மக்கள் திருத்தணி காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி போலீசார் பிடிபட்ட மர்ம நபரை திருத்தணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் பூண்டி பகுதியை சேர்ந்த பாபு(45) என்ற கட்டிட தொழிலாளி என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரிக்கின்றனர்.