சென்னை: நிவர் புயல் காரணமாக வெற்றிவேல் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் டிசம்பர் 5ம் தேதி திருச்செந்தூரில் நிறைவு விழா நடைபெறும் என்று பாஜ மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பாஜ கட்சியின் சார்பில் 6ம் ேததி திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரை தொடங்கப்பட்டது. திருத்தணியில் தொடங்கி வடமாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் வெற்றிவேல் யாத்திரையானது மிகச் சிறப்பாக நிறைவு பெற்றுள்ளது. அதேசமயம் டிசம்பர் 5ல் திருச்செந்தூரில் நடைபெறும் வெற்றிவேல் யாத்திரையின் நிறைவு விழா திட்டமிட்டப்படி நடக்க இருக்கிறது.
நிறைவு விழா காலை 11 மணிக்கு தொடங்கும். அதற்கு முன்பாக விடுபட்டுள்ள கோயில்களான சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், கோயில்களுக்கு மட்டும் சென்று ஸ்ரீமுருக பெருமானை தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இப்போது நம் அனைவருடைய கவனமும் நிவர் புயல் நிவாரணப்பணியில் இருக்க வேண்டும். அனைத்து மாவட்ட பாஜ நிர்வாகிகளும் பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளுக்கு சென்று நிவாரணப்பணிகளில் ஈடுபட வேண்டும். நிவர் புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் சிறப்பான கவனம் கொடுத்து செயல்பட்டு கொண்டிருக்கின்ற தமிழக அரசு அதிகாரிகளுடனும், வழிகாட்டுதலுடனும் நிர்வாகிகள் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.