புதுடெல்லி: கொரோனா தொற்று காலத்தில், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள் காணொலி வாயிலாக 25 லட்சம் வழக்குகளின் விசாரணையை நடத்தியதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் காணொலி மூலம் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது: கொரோனா தொற்றினால் உலகம் முழுவதிலும் மக்களின் உடல்நலம், வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. அதே நேரம், மின்னணு சுற்றுச்சூழல் ஆகியவை உலகம் முழுவதையும் இணையதளம், மொபைல் போன், தொழில்நுட்பம் ஆகியவை மூலம் இணைத்துள்ளது. சட்ட ரீதியில் தீர்வு காணப்பட வேண்டிய சவால்களுக்கும் நிறைய வாய்ப்புகளை வழங்கி உள்ளது.
இந்தியாவில் உள்ள 25 உயர் நீதிமன்றங்கள், 19,000 மாவட்ட நீதிமன்றங்கள், காணொலி மூலமாக கொரோனா காலத்தில் 25 லட்சம் வழக்குகளை விசாரித்துள்ளது. இதில், போக்குவரத்து அத்துமீறல் தொடர்பான வழக்குகளே அதிகம் இருந்தன.
அவற்றின் மூலம் ரூ.115 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தவிர, உச்ச நீதிமன்றம் 10,000 வழக்குகளில் காணொலி வாயிலாக விசாரணை நடத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.