சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் 0.64 ஏக்கர் பரப்பளவில், 12 கோடியே 22 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார். இதேபோல், கொரட்டூரில் 0.98 ஏக்கர் பரப்பளவில் 13 கோடியே 90 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம் மற்றும் வேளச்சேரியில் 0.47 ஏக்கர் பரப்பளவில் 8 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதி II-ல், சுயநிதி திட்டத்தின் கீழ் மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 45 கோடியே 58 லட்சம் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன், தலைமை செயலாளர் சண்முகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் முருகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.