சென்னை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருப்பதி செல்லும் வழியில் டெல்லியிலிருந்து தனி விமானத்தில் நேற்று காலை சென்னை வந்தார். விமானம் காலை 9.20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தது. அப்போது பலத்த மழை பெய்ததால், ஜனாதிபதி விமானத்திலிருந்து இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்பு காலை 9.46 மணிக்கு ஜனாதிபதி விமானத்தை விட்டு கீழே இறங்கி வரவேற்பு பகுதிக்கு வந்தார். அங்கு ஜனாதிபதியை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.வரவேற்பு முடிந்ததும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கு தயாராக நின்ற இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் காலை 10 மணிக்கு திருப்பதி சென்றார். பின்னர் மாலை 7.40 மணிக்கு சென்னை வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, கவர்னர் பன்வாரிலால், துணை முதல்வர் வரவேற்று டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.