×

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை 7 மாவட்டங்களில் 465 ஆம்புலன்ஸ்கள் தயார்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

சென்னை:  நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக 7 மாவட்டங்களில் 465 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. 108 கட்டுப்பாட்டு மையத்தில் அவசரகால செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொடர்பாக நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 108 அவசரகால சேவை கட்டுப்பாட்டு மையம் மற்றும் 104 மருத்துவ உதவி மையம் ஆகியன பொது மக்களுக்கு உதவிடும் வகையில் தயார் நிலையில் உள்ளன. கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 465 அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

108 அவசரகால சேவை கட்டுப்பாடு மையத்திற்கு அதிக அளவிலான அழைப்புகள் வருவதற்கு வாய்ப்புள்ளதால் கூடுதல் பளுவினை எதிர்கொள்ளும் வகையில் 108 அவசரகால மாநில கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலாக பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்குமிடம் உட்பட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புயல் காரணமாக 108 அவசரகால கட்டுப்பாட்டு சேவை மையத்தில் மின் துண்டிப்பினை சமாளிக்கும் வகையில் 2000 லிட்டர் எரிபொருளுடன் 2 ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 108 அவசரகால சேவையானது காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* அவசர உதவி பெற வாட்ஸ் அப்
108 அவசரகால சேவை கட்டுப்பாட்டு மையம் 24 மணிநேரமும் அவசரகால அழைப்புகளை கண்காணித்து, அரசு வெளியிடும் தகவல்கள் மற்றும் எச்சரிக்கைகளை உடனுக்குடன் குறுகிய செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் வழங்கும். பொதுமக்கள் அவசரகால செயல்பாட்டு மைய எண்களான 044-28888105, 7338895011 ஆகியவற்றை தொடர்புகெண்டு ஆலோசனை பெறலாம்.

Tags : ambulances ,districts ,Health Minister , 465 ambulances ready in 7 districts: Health Minister
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை