சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடு செய்துள்ளதாக துணை வேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு இ-மெயில் மூலம் ஆதாரங்களுடன் புகார் தரலாம் என்று விசாரணை நீதிபதி பி.கலையரசன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா பொறுப்பேற்ற தில் இருந்து அவருக்கும், அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. பொறியியல் கல்லூரிகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட விஷயத்தில் தமிழக அரசுக்கும் துணை வேந்தர் சூரப்பாவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. பல்கலைக்கழகத்தில் தனது மகளுக்கு பணி வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அண்ணா பல்கலைக்கழகத்தின் நிதியில் சுமார் 200 கோடிவரை முறைகேடு நடந்துள்ளதாகவும், ஆசிரியர் பணியிடங்கள் நியமனத்தில் 13 லட்சம் முதல் 15 லட்சம் வரை ஒவ்வொருவரிடமும் வாங்கியதில் சுமார் 80 கோடிவரை முறைகேடு நடந்துள்ளது.
இதில் துணை வேந்தருக்கும் தொடர்பு உள்ளதாக புகார்கள் வந்தன. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தமிழக அரசுக்கு புகார் மனுவாக வந்துள்ளது. பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் இல்லாமல் பணி நியமனம் வழங்கியதாகவும் சூரப்பா மீது புகார் வந்துள்ளது. இதையடுத்து, துணை வேந்தர் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணை இயக்குனர் சக்திநாதன் ஆகியோர் மீதான புகார் மீது விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.நீதிபதி கலையரசன் விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்றார். விசாரணை தொடர்பாக அவர் கூறும்போது, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது உரிய ஆதாரங்களுடன் புகார் தரலாம்என்று தெரிவித்
தார்.இந்நிலையில், விசாரணை அலுவலகத்தில் நீதிபதி கலையரசன் நேற்று கூறும்போது, துணை வேந்தர் சூரப்பா மீது ஆதாரங்கள் இருந்தால் பொதுமக்களும் புகார் கூறலாம். புகாரை இ-மெயிலில் inquirycomn.vc.annauniv@gmail.com என்ற முகவரியில் அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளார்.