சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால், கடந்த 3 மாதங்களில் மட்டும் 8 பேர் பலியாகினர். இதையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள், தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த வாரம் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தமிழகத்தில் தடை விதிக்க அரசு முடிவு செய்தது. இதை வலியுறுத்தி தமிழக ஆளுருக்கும் பரிந்துரை செய்தது.தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க ஆளுநர் ஒப்புதல் வழங்கி கடந்த 20ம் தேதி அவசர சட்டம் பிறப்பித்தார். இந்த நிலையில், ஆளுநரின் அறிவிப்பு நேற்று தமிழக அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், 6 மாதம் சிறைத்தண்டனையும் வழங்கப்படும். அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.