ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதனை சுற்றியுள்ள சிட்ரபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் வீட்டிர் வளர்க்கும் ஆடு, மாடு, நாய் போன்றவற்றிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டால் அவற்றிற்கு சிகிச்சையளிக்க ஊத்துக்கோட்டை கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவ்வாறு மருத்துவமனைக்கு சென்றால் அங்கு கால்நடை மருத்துவர் சரியான நேரத்திற்கு வருவதில்லை. இதனால் கால்நடைகளை வைத்துக்கொண்டு மக்கள் நீண்ட நேரம் காத்துக்கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே ஊத்துக்கோட்டையில் உள்ள கால்நடை மருத்துவமனையை குறித்த நேரத்தில் திறந்து சரியான நேரத்திற்கு டாக்டர்கள் வரவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் கூறியதாவது, “கால்நடைகளுக்கு நோய்வாய்பட்டால் அவற்றிற்கு சிகிச்சையளிக்க ஊத்துக்கோட்டை கால்நடை மருத்துவமனைக்கு சென்றால் அங்கு டாக்டர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை. இதனால் நாங்கள் நீண்ட நேரம் காத்துக்கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய கலெக்டர் மகேஸ்வரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஊத்துக்கோட்டை கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தரமாக டாக்டரை நியமிக்க வேண்டும்” என கூறினர்.