×

திருப்பதி செல்லும் வழியில் நாளை சென்னை வருகிறார் ஜனாதிபதி

மீனம்பாக்கம்: திருப்பதி செல்லும் வழியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நாளை சென்னை வருகிறார். இதனால் சென்னை விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், திருப்பதிக்கு செல்லும் வழியில் நாளை காலை 6.30 மணிக்கு டெல்லி பாலம் விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு புறப்படுகிறார். காலை 9.15 மணிக்கு அவர், சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு, அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், காலை 9.45 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு செல்கிறார். இதையடுத்து, நாளை மாலை திருப்பதியில் தரிசனத்தை முடித்து விட்டு ராணுவ ஹெலிகாப்டரில் மாலை 5.35 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு மீண்டும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், மாலை 5.45 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

திருப்பதி செல்லும் வழியில் ஜனாதிபதி சென்னை வருகிறார். ஆனால், விமான நிலையத்தில் இருந்து வெளியே வரவில்லை. இருப்பினும் சென்னை பழைய விமான நிலையத்தில் இன்று காலையில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் விமானம் வந்து நிற்கும் இடம், அவர் பயணிக்க இருக்கும் ஹெலிகாப்டர்கள் நிற்கும் பகுதிகள் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் பழைய விமான நிலையத்தில் பணி மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக வரும் ஊழியர்கள் பலத்த சோதனைகளுக்கு பின்பே அனுமதிக்கின்றனர். உரிய பாஸ், அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை. சென்னை பழைய விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Tags : President ,Chennai ,Tirupati , The President is coming to Chennai tomorrow on his way to Tirupati
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...