காரைக்கால்: காரைக்காலில் இருந்து கடலுக்கு சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை. தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறும். 25-ம் தேதி பிற்பகலில் நிவர் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிவர் புயலால் மீனவர்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
காரைக்காலில் உள்ள 11 மீனவ கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். விசைப்படகு, நாட்டுப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். 21 மற்றும் 21-ம் தேதிகளில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்களுக்கு புயல் உருவாகி இருப்பது தெரியாது. அதற்கு முன்பாகவே அவர்கள் சென்றுவிட்டனர். காரைக்காலில் உள்ள துறைமுக அதிகாரிகள் நேற்று மாலை தான் மீனவர்களுக்கு அறிவிக்கை கொடுத்தனர்.
புயல் உருவாகி இருப்பதாகவும், உடனடியாக அனைவரும் கரை வந்து சேர வேண்டும் என்றும் கூறினர். ஆனால் இந்த தகவல் கடலில் உள்ள மீனவர்களுக்கு தெரியாது. அவர்களை தற்போது தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. தற்போது சற்று நேரத்திற்கு முன்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புயல் முன்னெச்சரிக்கை கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்விக்கனன்னன் அதில் கலந்து கொண்டு கூறும் போது அவர்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இருந்த போதிலும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் அவர்களை கரைக்கு கொண்டு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் சிக்கியுள்ளனர்.