×

வெண்டிபாளையம் ரயில்வே கேட்டில் சப்வே கட்டுமான பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

ஈரோடு: ஈரோடு வெண்டிபாளையம் ரயில்வே கேட்டில் சப்-வே கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க அப்பகுதி பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு பழைய கரூர் ரோட்டில் வெண்டிபாளையம் செல்லும் வழியில் இரண்டு ரயில்வே கிராசிங்குகள்(ரயில்வே கேட்) உள்ளன. இந்த கிராசிங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வெண்டிபாளையம், மோளகவுண்டன்பாளையம், லோகநாதபுரம் உள்ளிட்ட கிராமங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், வெண்டிபாளையம் ரயில்வே கிராசிங்குகளின் வழியாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடந்து செல்ல வசதியாக சப்-வே (நுழைவு பாலம்) கட்டுமான பணி கடந்த ஆண்டு துவங்கப்பட்டு, அப்பகுதியில் சாலை போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெண்டிபாளையம், மோளகவுண்டன் பாளையத்தில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் 3 கி.மீட்டர் தூரம் சுற்றி தங்களது வேலைகளுக்கு சென்று வருகின்றனர். சப்வே கட்டுமான பணி மந்தமாக நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பணியை விரைந்து முடித்து, சாலை போக்குவரத்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : completion ,Vendipalayam Railway Gate , Railway Gate
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா