×

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் கார்த்திகை முதல் வார பெருவிழா

சோளிங்கர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் கார்த்திகை முதல் வார பெருவிழா நேற்று நடந்தது. இதில், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. சோளிங்கரில் லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒரே குன்றாலான பெரிய மலையின் மீது யோகலட்சுமி நரசிம்மரும் அமிர்தவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். அருகில் உள்ள சிறிய மலையின் மீது யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். யோக நிலையில் இருக்கும் நரசிம்மர் கார்த்திகை மாதத்தில் மட்டும் கண்திறந்து அருள்பாலிப்பதாக ஐதீகம்.

இதையொட்டி, இக்கோயிலில் கார்த்திகை பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அதன்படி, இந்தாண்டு கார்த்திகை பெருவிழா கடந்த 20ம் தேதி தொடங்கியது. இவ்விழா டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. கார்த்திகை பெருவிழாவில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் நாள் ஒன்றுக்கு 900 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கார்த்திகை பெருவிழா முதல் வாரத்தையொட்டி நேற்று ஆந்திரா, கர்நாடகா, மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். கோயில் நுழைவு வாயில் அருகே இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையிலான போலீசார் முன்பதிவு செய்யாமல் தரிசனத்திற்கு வந்த பக்தர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

அப்போது, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து முன்பதிவு செய்யாமல் வந்த பக்தர்கள் முன்பதிவு செய்வது குறித்த தகவல் தெரியாது தெரிந்திருந்தால் முன்பதிவு செய்து விட்டு வந்திருப்போம். மலையடிவாரம் வரை மட்டுமாவது அனுமதியுங்கள் அங்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டு செல்கிறோம் என்று கேட்டனர். அதற்கு போலீசார் எங்களது கடமையை நாங்கள் செய்கிறோம். ஆன்லைன் முன்பதிவு இல்லாமல் அனுமதிக்க முடியாது என கறார் காட்டினர். இதனால் பெரும்பாலான பக்தர்கள் விரக்தியடைந்தனர். கோயில் நிர்வாகத்தினர் முன்பதிவுடன் முகக்கவசம் அனிந்து வந்தவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து தரிசனத்திற்கு அனுமதித்தனர்.

Tags : Karthika ,festival ,Cholingar Lakshmi Narasimhar Temple , Cholingar
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!