×

ஆவடி அருகே கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 22 பெண்கள் படுகாயம்: டிரைவர் தலைமறைவு

ஆவடி: ஆவடி அடுத்த வெள்ளானூர் கிராமத்திலிருந்து மிட்டனமல்லியில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சரக்கு ஆட்டோவில் 22 பெண்கள் நேற்று மதியம் புறப்பட்டனர். இந்த ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த சிவா(27) என்பவர் ஓட்டி சென்றார். இந்த ஆட்டோ ஆவடி - வீராபுரம் நெடுஞ்சாலை, வெள்ளானூர்  பள்ளிக்கூடம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஆட்டோ, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. பின்னர், அந்த ஆட்டோ சாலையிலேயே கவிழ்ந்து உருண்டு ஓடியது. இதில், பயணம் செய்த அனைத்து பெண்களும் ஆட்டோவிற்கு அடியில் சிக்கி உயிருக்கு போராடினர்.

இதனை பார்த்த, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர், அவர்கள் ஆட்டோவில் சிக்கியிருந்த பெண்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக மீட்டனர். இதில், வெள்ளானூர், 2வது தெருவை சேர்ந்த சுகந்தி(55), பச்சையம்மாள் (35), பார்வதி(40) ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், அதே பகுதியை சேர்ந்த நந்தினி(39) என்ற பெண்ணுக்கு வலது கை துண்டிக்கப்பட்டது. மேலும், சாவித்திரி(55), இந்துமதி(45), நிர்மலா(45), வளர்மதி(48), கிருஷ்ணவேணி(75), சுஜாதா(35), முருகம்மாள்(55), ரேவதி(37), சாந்தி(55), பார்வதி(43), செல்வி(49), வாசுகி(39), சுலக்சனா(60), லட்சுமி(55), கோவிந்தம்மாள்(55), தனலட்சுமி(62),

மல்லிகா(50),கலைவாணி(37) ஆகிய 18 பெண்களுக்கும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அனைவரையும் பொதுமக்கள் தனியார் கல்லூரி, அரசு ஆம்புலன்ஸ்களில் மீட்டு அம்பத்தூர் தனியார் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சுகந்தி பச்சையம்மாள், பார்வதி, நந்தினி ஆகியோர் கவலைக்கிடமாக உள்ளனர். புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

விபத்துக்கு டிரைவர் குடிபோதையில் இருந்தாரா அல்லது ஆட்டோவில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவர் சிவாவை பிடித்த பிறகு தான் விபத்து தொடர்பாக முழு விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Tags : women ,Avadi , 22 women injured in truck overturn near Avadi
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...