×

ராமநாதபுரத்தில் ரூ.90 லட்சம் கொடுத்து கட்சி அலுவலகம் கட்ட வாங்கிய இடம் எங்கே? அதிமுகவினரின் காணவில்லை போஸ்டரால் சலசலப்பு

சாயல்குடி: அதிமுக கட்சி அலுவலகம் கட்டுவதற்கு வாங்கிய இடத்தை காணவில்லை என்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும், அதிமுக தொண்டர்கள் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கட்சி அலுவலகம் கட்ட தலைமை உத்தரவிட்டதால், 2012ல் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதிமுகவை சேர்ந்த ரியல் எஸ்டேட் பிரமுகர் ஒருவர் மூலம் நிலத்தின் உரிமையாளரிடம் 27 சென்ட் நிலம் ரூ.1 கோடியே 60 லட்சம் என பேசி முடிக்கப்பட்டது.

அப்போது மாவட்ட அமைச்சராக இருந்தவர் மூலம், 2012ல் அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த ஆனிமுத்துவிடம் கட்சிக்கான இடம் வாங்க ஒரு கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் ரூ.90 லட்சம் நிலத்தின் உரிமையாளருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் முழு பணமும் செட்டில் பண்ணாததால் பத்திரம் பதிவாகவில்லை. இந்நிலையில் மாவட்டச் செயலாளர்கள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டனர். 5 வருடங்களுக்கு மேலாக அதிமுக சார்பில் முழு பணமும் கொடுக்க முன்வரவில்லை. இந்நிலையில் அந்த இடத்திற்கு மதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சென்ட் ரூ.13 லட்சம் என விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தற்போதைய நிர்வாகிகள் மீது சந்தேகப்பட்டு அவர்களை கைது செய்யக் கோரி அதிமுக தொண்டர்கள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஓட்டியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. போஸ்டரில், ‘‘கட்சி அலுவலகம் கட்ட வாங்கிய இடம் எங்கே? கட்சி இடத்தை விற்று பணத்தை கையாடல் செய்த கயவர்கள் மீது நடவடிக்கை எடு - இவண் உண்மை தொண்டர்கள் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக’’ என அச்சிடப்பட்டுள்ளது. மேலும் சினிமா படம் ஒன்றில் கிணற்றை காணவில்லை என நகைச்சுவை நடிகர் வடிவேல் கூறுவது போன்று மீம்ஸ்களை உருவாக்கி இந்த போஸ்டருடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு டிரெண்டிங் ஆகி வருகிறது.

Tags : Ramanathapuram ,party office ,superintendent , Where in Ramanathapuram did you buy the party office for Rs 90 lakh? The buzz of the superintendent's missing poster
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...