சென்னை: தமிழகத்தில் கலை நிகழ்ச்சிகளை வரும் 25ம் தேதி நடத்த முதல் அனுமதி அளித்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. திறந்த வெளி அரங்கத்தில் 50 சதவீத இடங்களை மட்டுமே நிரப்ப வேண்டும். ஆனாலும், உச்சவரம்பு 200 பேருக்கு மேல் இருக்கக் கூடாது. சென்னையில் கலை நிகழ்ச்சி நடத்த மாநகர போலீஸ் கமிஷனரிடமும் அனுமதி பெற வேண்டும். ஆனால், மற்ற பகுதிகளில் மாவட்ட கலெக்டர்களிடம் அனுமதி பெற வேண்டும். கொரோனா வழிகாட்டி நெறிமுறை அடிப்படையில் இந்த அனுமதி அளிக்கப்படும். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அரங்கில் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே அரங்கில் அனுமதிக்க வேண்டும். அரங்கில் சானிடைசர் வைக்க வேண்டும். அதே நேரத்தில் சமூக, அரசியல், மதம் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கான தடை தொடர்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.