திருப்பதி: திருப்பதிக்கு ஜனாதிபதி வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார். இதற்காக வருகிற 24ம் தேதி தனி விமானம் மூலம் திருப்பதி ரேணிகுண்டா சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.
அதன் பின்னர், காரில் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.
இதையொட்டி, ரேணிகுண்டா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் பரத்குப்தா தலைமையில் நேற்று நடந்தது. இதில், விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதி சாலை பயணத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கலெக்டர் பரத்குப்தா, தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி கோபிநாத், எஸ்பி ரமேஷ் மற்றும் ஐஜி சசிதர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.