×

ரூ20 ஆயிரத்திற்கு சந்தையில் கிடைக்கும் தெருவிளக்கு கண்காணிப்பு கருவியை ரூ57 ஆயிரம் கொடுத்து வாங்குவதா?... மாநகராட்சிக்கு திமுக கண்டனம்

சென்னை: திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு எம்பி வெளியிட்டுள்ள அறிக்கை: தெரு விளக்குகளை கண்காணிக்கும் கருவி ஒன்று சந்தையில் 20 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் நிலையில், அந்த கருவியை சென்னை மாநகராட்சி 57 ஆயிரம் ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்துள்ளது. தொழில்நுட்பங்கள் அதிகம் உள்ள கருவி என்றும், டெண்டர் மூலமே வாங்கப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி அதிகாரிகள் சொன்னாலும், இதுமாதிரி கொள்முதல் ஊழல் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கீழ் தங்கு தடையின்றி அதிமுக ஆட்சியில் நடைபெற்று வருகிறது.

இந்த கருவியை 20 முதல் 25 ஆயிரம் ரூபாய்க்கு கொடுக்க நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அதுவும் 7 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கொடுப்பதற்கு முன்வந்தும் 57 ஆயிரம் ரூபாய்க்கு 1 ஆண்டு உத்தரவாதத்துடன் இந்த கருவிகளை கொள்முதல் செய்து மக்கள் வரிப்பணத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் பாழ்படுத்தியுள்ளார். அந்த அமைச்சரின் கீழ் உள்ள கோவை மாநகாட்சி இதே கருவியை 24 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்திருக்கிறது. ஆனால், சென்னை மாநகராட்சி 57 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது. வேறு மாநகராட்சிகள் என்ன விலைக்கு வாங்கியிருக்கின்றன என்பது இன்னும் வெட்ட வெளிச்சத்திற்கு வரவில்லை.

இந்த கண்காணிப்பு கருவி வாங்குவதில் மட்டும் 20 கோடி ரூபாய்க்கு பதில் 40 கோடி ரூபாயை செலவழித்துள்ள உள்ளாட்சித்துறை அமைச்சரும், சென்னை மாநகராட்சி கொள்முதல் அதிகாரிகளும் கூட்டணி சேர்ந்து அதிக விலையாக கொடுத்த 20 கோடியை சுருட்டியுள்ளார்களா என்ற நியாயமான கேள்வி எழுகிறது. இந்த கருவி கொள்முதல் செய்யும் திட்டம் ஜெர்மன் வங்கி நிதியுதவி திட்டம் என்பது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. ஆசிய வளர்ச்சி வங்கி நிதியோ, ஜெர்மன் வங்கி வளர்ச்சி நிதியோ எதிலும் கொள்ளையடிப்பது என்ற ஒரே நோக்கில் உள்ளாட்சித்துறை அமைச்சர் செயல்பட்டு அரசுக் கருவூலத்தை குறிப்பாக, மாநகராட்சிகளின் கருவூலத்தை கொள்ளையடித்து கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடுவது போல  “ஊழல் மணி” எஸ்.பி.வேலுமணியின் கீழ் உள்ளாட்சித்துறை தமிழக வரலாற்றில் முதன் முதலாக “கொள்ளையாட்சி”த்துறையாக மாறியிருக்கிறது. அதற்காகவே நகர்ப்புற மற்றும் மாநகராட்சி தேர்தல்களை நடத்தாமல் தனி அதிகாரிகளையும், மாநகராட்சி ஆணையர்களையும் “கூட்டணி” சேர்த்துக் கொண்டு இப்படி அரசு பணத்தில் ஊழல் செய்து, ஊழல் சாக்கடையில் சுகமாக நீந்திக்கொண்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நிச்சயம் சட்டத்தின் பிடியில் இருந்தும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் நடவடிக்கையிலிருந்தும் தப்பிக்க முடியாது.

எனவே, இந்த டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பெறப்பட்ட கருவிகளை திருப்பிக் கொடுத்து, இந்த கொள்முதலுக்கு காரணமான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி ஆணையர் மீது ஊழல் வழக்குப் பதிய வேண்டும் என்றும்  முதல்வர் பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : corporation ,DMK , Buy street light surveillance equipment available in the market for Rs. 20,000 for Rs. 57,000? ... DMK condemns the corporation
× RELATED காஞ்சி மாநகராட்சி மாதாந்திர...