சென்னை: பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளது (ஓடிஏ). புதிதாக தேர்வு செய்யப்படும் இளம் ராணுவ அதிகாரிகளுக்கு இங்கு மலையேற்றம், குதிரையேற்றம், உடற்பயிற்சி, பாராசூட் உள்ளிட்ட கடினமான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு 181 ஆண்கள், 49 பெண்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த 15 பேர் என மொத்தம் 245 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா பரங்கிமலை ஓடிஏ மைதானத்தில் நேற்று காலை நடந்தது. இதில் மேற்கு பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.பி.சிங் பங்கேற்று ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, சிறப்பாக செயல்பட வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் மற்றும் தங்கப் பதக்கம் ஏ.சி.ஏ.வருண் கணபதிக்கு வழங்கப்பட்டது. மகாதேவ் சிங் ரத்தோருக்கு வெள்ளி பதக்கமும், பாட்டீல் டிராஜ் பதங்கராவுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று வழிமுறைகள் காரணமாக பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.