×

பருவமழையால் வீதிக்கு வீதி தேங்கிய கழிவு நீர் நரகமாக மாறிய வடசென்னை: இன்றுவரை வடியாததால் துர்நாற்றம் வீசும் அவலம்

* கொசுக்கள், தொற்றுநோய் பரவும் அபாயம்
* கவனிக்கவே விரும்பாத மாநகராட்சி அதிகாரிகள்

சென்னை: கழிவுநீர், கொசு உற்பத்தி என்று பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை எதிர்பார்த்து வட சென்னை மக்கள் பல  ஆண்டுகளாக ஏங்கியபடி வாழ்ந்து வருகின்றனர். எனவே வட சென்னையை மாற்றி அமைக்க சிறப்பு திட்டத்ைத செயல்படுத்த கோரிக்கை  விடுத்துள்ளனர். சென்னையை உலக தரத்திற்கு ஏற்ற ஒரு நகரமாக மாற்றுவோம் என்று ஆளும்கட்சி தலைவர்கள் பேசுவதை நாம் கேட்டுள்ளோம்.  ஆனால் சென்னையின் உண்மையான நிலை என்ன என்பது ஒரு மழை பெய்தால் தெரிந்துவிடும். குறிப்பாக வட சென்னையின் நிலைமை மிகவும்  மோசம். வடசென்னையின் முக்கிய பகுதிகளான ராயபுரம், தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், திருவொற்றியூர், எண்ணூர், பெரம்பூர், கொடுங்கையூர்,  புளியந்தோப்பு, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகள் குறுகிய சாலை வசதி கொண்டவை.

மேலும் மக்கள் தொகை நெருக்கம் அதிகம் உள்ள பகுதி. இங்கு கழிவுநீர் கால்வாயில் பெரிய அடைப்பு ஏற்பட்டாலோ, மழைநீர் வடிகால் வாரிய  பணிகளை தொடங்கினாலோ, அதை முடிப்பதற்கு குறைந்தது ஓராண்டு காலம் ஆகிறது. குடிநீர் வாரியம், மின்சார வாரியம், மாநகராட்சி உள்ளிட்ட  அனைத்து துறை அதிகாரிகளுக்கு இடையில் சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் அதிகம் பாதிக்கப்படுவது பொது மக்கள்தான். இதனால்  ஒவ்வொரு மழைக் காலங்களிலும் சில உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட டிக்காஸ்டர் ரோடு,  அம்மை அம்மாள் தெரு, பிரகாஷ் ராவ் காலனி, நாராயணசுவாமி தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, பட்டாளம் சந்திப்பு, ஸ்டாரன்ஸ் ரோடு,  கன்னிகாபுரம், சாஸ்திரி நகர் உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரம் மழை பெய்தாலே இந்த இடங்களில் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்க்கும்.

இதேபோன்று பேசின் பிரிட்ஜ் பகுதியில் பார்த்தசாரதி தெரு, வீரா செட்டி தெரு சந்திப்பு, ஓட்டேரி ஸ்டீபன்சன் ரோடு. பெரவள்ளூர் ஜிகேஎம் காலனி,  ஜவஹர் நகர் 6வது மெயின் ரோடு சந்திப்பு, பல்லவன் சாலை உள்ளிட்ட இடங்களில் எப்பொழுதும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்.  மாத்தூர் எம் எம் டி ஏ பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. எண்ணூர் நெட்டுகுப்பம் முகத்துவாரம் பகுதியில்  தொழிற்சாலையிலிருந்து கழிவுநீர் வெளியேறுவதால் மழைக்காலங்களில் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ேமலும் ராயபுரம்  சோலையம்மன் தெரு, கப்பல் போல் தெரு, வண்ணாரப்பேட்டை காட்பாட தெரு ஆகிய இடங்களிலும் மழை நீர் தேங்கி அது கழிவு நீருடன் கலந்து  மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இவ்வாறு அதிக பாதிப்புக்கள் மிக்க இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதற்கு என்ன காரணம் என இதுவரை அதிகாரிகள்  பெரிய ஆய்வுகளை நடத்தி அதனை தீர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. குறிப்பாக சாலைகள் அமைக்கும் போது அந்த  சாலைகளைப் பெயர்த்து எடுத்துவிட்டு அதன் பிறகே புதிய சாலைகள் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் வீடுகளின் அளவுக்கு ஏற்ப  சாலைகளின் அளவும் ஓரளவிற்கு சரிசமமாக இருக்கும். இதனால் சாலையின் இருபுறங்களிலும் தண்ணீர் தேங்குவது இருக்காது ஆனால் தற்பொழுது  சாலைகள் போடப்பட்டு அந்த சாலைகளுக்கு மேலே மீண்டும் தார் சாலைகள் அமைக்கப்படுகிறது. இதனால் வீடுகளுக்கு ஒரு படி மேலே சாலைகள்  சென்று விடுகின்றன. இதனால் மழைக்காலங்களில் சாலையில் இருபுறமும் சிலசமயங்களில் வீடுகளுக்கு உள்ளேயே மழைநீர் சென்றுவிடுகிறது.

இதனை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. மேலும் கழிவு நீர் செல்லும் பைப்பினை எடுத்து மழைநீர் வடிகால் வாரிய கால்வாயில்  கடைக்காரர்களும் பொதுமக்களும் விட்டுள்ளனர். இதனால் மழைநீரை சேகரிக்க கட்டப்பட்ட இந்த கால்வாயில் தற்போது கழிவு நீர் மட்டுமே ஓடுகிறது.  குறிப்பாக கழிவுநீர் வசதிக்காக ஒரு பள்ளத்தை தோண்டி அதிகாரிகள் அதை மூடிவிட்டு மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்காமல் சென்று  விடுகின்றனர். இதனால் தோண்டப்பட்ட அந்த பள்ளத்தில் வேலை முடிந்ததா இல்லையா என தெரியாமல் மற்ற அதிகாரிகளும் விட்டுவிடுகின்றனர்.
சென்னையில் இருந்து வெளியேறும் மழைநீர் மற்றும் கழிவுநீரை முகத்துவாரத்தில் குறிப்பிட்ட இடத்தில் அடைப்பு ஏற்படாமல் அதை வெளியேற்ற  வேண்டும் இதற்கு ஒவ்வொரு முகதுவாரத்திலும் 2 பொக்லைன் இயந்திரங்களை வைத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக அதை தூர்வாரி  வர வேண்டும்.

அவ்வாறு தூர் வராவிட்டால் ஒரு சிறு மழைக்கே மீண்டும் அடைப்பு ஏற்பட்டுவிடும் இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக செய்வதில்லை.  இதனால் மழை நீர் வடியாமல் பக்கிங்காம் கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டு அந்த தண்ணீர் சாலையில் ஓடுகிறது. அதிகபட்சம் அந்தக்  கால்வாய் 5 அடி ஆழம் உள்ளது என்றால் அதில் இரண்டு அடிக்கு சில்ட் எனப்படும் சேறும் சகதியும் காணப்படும். மீதி மூன்று அடி மட்டுமே தண்ணீர்  வேகமாக ஓடும். அந்த தண்ணீர் வேகமாக ஓடும்போது அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அது சாலைக்கு வந்து விடுகிறது. இதை பொதுப்பணித்துறை  அதிகாரிகள் சரிவர கவனிக்காத காரணத்தினால் சிறு மழைக்கே சென்னையில் பல இடங்களில் மழை நீர் வெளியேறுகிறது.

இவ்வாறு அதிகாரிகள் செய்யும் சிறு சிறு பிழைகளுக்கு தான் வட சென்னை மக்கள் பெரிய அளவுக்கு விலை கொடுத்து வருகின்றனர். எனவே பல  ஆண்டுகளாக பிரச்னைகளுடன் வாழ்ந்து வரும் வட சென்னை மக்களுக்கு நிரந்தர தீர்வை அளிக்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று  அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags : Chennai , North Chennai has turned into a hell of a wasteland due to the monsoon rains.
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...