திருவனந்தபுரம்: நடிகை பார்வதியின் ராஜினாமாவை ஏற்க மலையாள நடிகர் சங்கம் தீர்மானித்துள்ளது. மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருப்பவர் இடைவேளை பாபு. சமீபத்தில் இவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘மலையாள நடிகர் சங்கம் சார்பில் தயாரிக்கப்படும் படங்களில் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகைக்கு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இறந்த ஒருவருக்கு மீண்டும் எப்படி வாய்ப்பு கொடுக்க முடியும்?’ என அவர் கூறியிருந்தார். இதற்கு நடிகைகள் பார்வதி, ரேவதி, ரீமா கல்லிங்கல் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இடைவேளை பாபுவை கண்டித்து, சங்கத்தில் இருந்து விலகுவதாக, கடந்த மாதம் நடிகை பார்வதி பேஸ்-புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது ராஜினாமா கடிதத்ைதயும் அவர் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மலையாள நடிகர் சங்க நிர்வாக குழு கூட்டம் கொச்சியில் நடந்தது. தலைவர் நடிகர் மோகன்லால் தலைமை வகித்தார். துணைத்தலைவர்களான ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் முகேஷ், கணேஷ்குமார், பொதுச்செயலாளர் இடைவேளை பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடிகை பார்வதியின் ராஜினாமாவை ஏற்பது என தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பினீஷை உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு எம்எல்ஏக்கள் முகேஷ், கணேஷ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பினீஷிடம் விளக்கம் கேட்ட பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.
ஆனால் நடிகை பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு ஒரு நீதி, இவருக்கு ஒரு நீதியா என சில உறுப்பினர்கள் கேள்வி கேட்டனர். இறுதியில் பினீஷிடம் விளக்கம் கேட்டபின்னர் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.