சத்தியமங்கலம்: பவானிசாகர் அணை அருகே மீண்டும் ஊருக்குள் நுழைய முயன்ற ஒற்றை யானையை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் அடிக்கடி பவானிசாகர் அணை நீர்தேக்கத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வனத்தைவிட்டு வெளியேறும் ஒற்றை யானை அணை முன்புள்ள புங்கார், பெரியார் நகர் உள்ளிட்ட கிராமங்களில் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து ஒற்றை யானையை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர், நான்கு குழுக்களாக பிரிந்து ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மதியம் காராச்சிக்கொரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை பவானிசாகர் அணையின் கரையை ஒட்டியுள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தார்சாலையில் புங்கார் கிராமம் நோக்கி ஜாலியாக நடந்து சென்றது.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டியடித்தனர். இருப்பினும் ஒற்றை யானை மீண்டும் வனத்தைவிட்டு வெளியேறி ஊருக்குள் நுழைய வாய்ப்புள்ளதால், வனத்துறையினர் அப்பகுதியில் யானை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
பர்கூரில் ஒற்றை யானை உலா
அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியின் நடுவில் பர்கூர் கிராமம் உள்ளது. இப்பகுதியில் 32 மலை கிராமங்களுக்கான காவல் நிலையமாக பர்கூர் காவல் நிலையம் உள்ளது. இப்பகுதியில் மாலை நேரங்களில் தினமும் ஒற்றை ஆண் யானை வந்து செல்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பர்கூர் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.