×

கொரோனா காரணமாக அனுமதி இல்லை: பக்தர்கள் ஆரவாரமின்றி பழநியில் சூரசம்ஹாரம்

பழநி: கொரோனா பரவலால் பழநி மலைக்கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி பக்தர்கள் ஆரவாரமின்றி நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், பழநி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 15ம் தேதி மலைக்கோயிலில் காப்புகட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்றுமாலை நடந்தது. இதையொட்டி மலைக்கோயிலில் நேற்று பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜையும், 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடந்தது. தொடர்ந்து 2.30 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்ததும், கோயில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் வடக்கு கிரிவீதி வந்தடைந்தார்.

தொடர்ந்து கோயில் தலைமை குருக்கள் அர்ச்ச ஸ்தானிகர் அமிர்தலிங்கம் வேல் கொண்டு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும் வதம் செய்தார். முன்னதாக நவவீரர்கள், வீரபாகு உள்ளிட்டோர் சூரரிடம் சமரசம் பேசும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோயில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் போன்றோரின் அரோகரா கோஷம் முழங்க சூரசம்ஹாரம் நடந்தது. இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடந்தது.

பின்பு மலைக்கோயிலில் சம்ரோட்சனை பூஜை செய்யப்பட்டு நடை திறந்து இராக்காலபூஜை நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, பழநி கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, டிஐஜி முத்துச்சாமி, எஸ்பி ரவளிபிரியா, டிஎஸ்பி சிவா, துணை ஆணையர் செந்தில்குமார், ஆர்டிஓ அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொரோனா காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கிரி வீதிக்குள் கடைகள் அடைக்கப்பட்டு, வெளியாட்கள் நுழையா வண்ணம் 27 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். திருக்கல்யாணம் இன்று காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் மலைக்கோயிலிலும், மாலை 6.30 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோயிலிலும் நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்

திருப்பரங்குன்றம்:மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா, கடந்த 15ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி யாகசாலை பூஜையும், உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் மற்றும் சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு பூஜை நடந்தது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள திருவாச்சி மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. இதில், சுப்பிரமணியசுவாமி சூரபத்மனை வதம் செய்தார். கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், கோயில் வாசல் முன் ஏராளமான பக்தர்கள் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில்  துணை ஆணையர் மு.ராமசாமி, மற்றும் அலுவலர்கள் செய்தனர்.



Tags : Devotees ,Palani , Not allowed due to corona: Devotees roar in Palani without fanfare
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி