×

கண்டுகொள்ளாத வனத்துறை பேச்சிப்பாறை அணை தீவுகளில் மது அருந்தி கேரள கும்பல் கும்மாளம்

நாகர்கோவில்: இயற்கை வளம் கொஞ்சும் குமரியில், காளிகேசம், பேச்சிப்பாறை மற்றும்  பெருஞ்சாணி அணைகளின் மேற்பகுதியில் ஊட்டி கொடைக்கானலை மிஞ்சும் வகையில்  ரம்மியாக காட்சி அளிக்கும் பகுதிகள் உள்ளன. பேச்சிப்பாறை அணையின் நீர்  பிடிப்பு பகுதிகளில் ஏராளமான சிறு தீவுகள் உள்ளன.  அணைகள்  பொதுப்பணித்துறைக்கு சொந்தம் என்றாலும், அதன் நீர் பிடிப்பு பகுதிகள்  வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே இங்கு யாரும் செல்ல  முடியாது.

இந்த மலைகளில் வசிக்கும் காணி மக்கள் செல்ல மட்டும் படகு சேவை  தனியார் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ரூ.10 முதல் ரூ.20  மட்டுமே வசூலிக்க வேண்டும். இந்நிலையில், காளிகேசம், பேச்சிப்பாறை அருகே   இரட்டை அருவி மற்றும் திற்பரப்பு அருவிகளில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர்  சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், இயற்கையை ரசிக்க  குமரி வரும் கேரள பயணிகள், இங்கு எஸ்டேட் வைத்துள்ள கேரள நண்பர்கள் மூலம்  வனப்பகுதிக்குள் சென்று வருகின்றனர். காளிகேசம் பகுதியில் கோயிலுக்கு  செல்வதற்கே ஆயிரம் தடைகள் போடும் வனக்காவலர்கள், இதுபோன்ற வசதி மிக்க  பயணிகளை கண்டு கொள்வதில்லை. தற்போது, பேச்சிப்பாறை அணையில், உள்ள   தீவுகள்தான் கேரள மக்களின் விருப்ப சுற்றுலா தலமாக திகழ்கிறது.

இங்கு  அணையில் தண்ணீர் குடிக்க வரும் மிளாக்கள் உள்ளிட்ட வன விலங்குகளை கண் குளிர  கண்டு களிப்பதுடன், தீவுகளில் இறங்கி டென்ட் அமைத்து, சமையல் செய்து  சாப்பிட்டும், சிலர் மது அருந்தியும் கும்மாளம் இட்டு வருகின்றனர். சமையல்  செய்வதற்காக காட்டுப்பகுதியில் மரங்களை வெட்டி பயன்படுத்துகின்றனர். இதனால்  தீ விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும், அணைகளில்  படகுகளில் பயணம் செய்பவர்கள், லைப் ஜாக்கெட் போன்ற உயிர் காப்பு கவச  உடைகள் எதுவும் அணிவதில்லை. காற்று அதிகம் அடிக்கும் நேரங்களில் படகுகள்  கவிழும் அபாயம் உண்டு. இதனால் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி செல்லும் பயணிகள் ஆபத்தில் சிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற ஆபத்துக்களை அறிந்தாலும், படகோட்டிகள் ஒரு  முறை சவாரிக்கு, ரூ.1200க்கு மேல் பணம்  கிடைப்பதால்,  பயணிகளை கூவிச்சென்று அழைக்கின்றனர்.  தங்களிடம் வரும் பயணிகளை ஏதாவது ஒரு தீவில் இறக்கிவிடுகின்றனர்.

 இதில் கும்பலாக வரும் இளைஞர்கள் சமையல் செய்து சாப்பிடுவதுடன், மது அருந்தி விட்டு பாட்டில்கள் மற்றும் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் கவர்களை அங்கேயே போட்டு விடுகின்றனர். இதனால், மண் வளம் பாதிப்பதுடன், பிளாஸ்டிக் கவர்களை வன உயிரினங்கள் உண்டு அவற்றின் உயிருக்கே ஆபத்தாக மாறும் நிலையும் உள்ளது. சிலர் வனத்துறை உயர் அதிகாரிகளை கூட்டு சேர்த்து கொண்டு  மிளா போன்றவற்றை வேட்டையாடி உண்பதாகவும் புகார்கள் கூறப்படுகிறது. இதுபற்றி அகில இந்திய மக்கள் நலக்கழக மாநில துணைத் தலைவர் வக்கீல்  சதீஷ்  கூறியதாவது:  வனப்பகுதி  அருகே காவல் நிலையங்களில் பணியாற்றியவர்கள், ரப்பர் கழக அதிகாரிகள் என  பலரும் விலை உயர்ந்த தேக்கு மற்றும் ஈட்டி மரத்தடிகளை  வெட்டி சென்றதாக  அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம்  உள்ளன.

பேச்சிப்பாறை வனப்பகுதிகளில்  வனத்துறை ஊழியர்கள் துணையுடன் அத்துமீறல்கள் நடைபெறுகின்றன. சுற்றுலா  பயணிகளை எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி குடும்பத்துடனும் படகுகளில் அழைத்து செல்கின்றனர். இதுபற்றி முறையிட மாவட்ட  வனத்துறை அதிகாரியை சந்திக்க முயன்றாலும், அவரை சந்திக்க முடிவதில்லை. போனையும் எடுப்பதில்லை. எனவே உடனடியாக  நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால்  வனத்துறையை கண்டித்து  போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

காதல் ஜோடிகளும் தஞ்சம்

பேச்சிப்பாறை  தீவுகளில் தனிமையும், பறவைகளின்  ஒலியும் மனதிற்கு குதூகலத்தை  தருவதுடன், இங்கு போலீஸ் தொந்தரவு போன்றவை இருக்காது என்பதால், காதல்  ஜோடிகள் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகளும் தனிமையில் இனிமை காண இந்த  தீவுகளை நோக்கி வருகின்றனர்.



Tags : gang ,Kerala ,forest department talk island islands , Kerala gang kummalam drinking alcohol in the unseen forest islands of Pechipparai dam
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...