மதுரை: நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த பெரிய நம்பி நரசிம்ம கோபாலன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் குழுவினர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறங்காவலர் குழு நியமனத்திற்கான அறிவிப்பை அந்தந்த கோயில்களில் முன்பகுதியில் அனைவருக்கும் தெரியுமாறும், மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஆன்மீக வழியை பின்பற்றுவர்களைக் கொண்டு நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் நாராயணகுமார் ஆஜராகி, ‘‘அறநிலையத்துறை விதிகளுக்கு உட்பட்டே அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். நியமனத்திற்கான மாவட்ட குழு 26 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
இன்னும் 12 மாவட்டங்களில் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. 38,012 கோயில்கள் அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. 3,711 கோயில்கள் பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதுவரை 15,059 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 18,146 பேர் நியமிக்கப்பட வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘26 மாவட்டங்களில் அறங்காவலர் குழு நியமனத்திற்கான மாவட்ட குழுவில் இடம் பெற்றவர்களின் விபரம், அவர்களது கல்வித்தகுதி, ஆன்மீகத்தில் பங்கு, குற்ற வழக்குகளில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட விபரங்களை, அரசுத் பதில்மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.
இணையதளத்தில் கோயில் சொத்து விபரங்கள்
கோயில் சொத்து மீட்பு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், கோயில்களின் சொத்து தொடர்பான ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி, ஏன் வெப்சைட்டில் வெளியிடக் கூடாது. ஆட்கள் பற்றாக்குறை இருந்தால் அவுட்சோர்சிங் முறையில் பயன்படுத்தலாமே என்றனர். அறநிலையத் துறை கமிஷனர் பிரபாகர் வீடியோ கான்பரன்சில் ஆஜராகி, கோயில்களின் சொத்துக்கள் கணக்கிடப்பட்டு வருகிறது. இவை தொகுக்கப்பட்டு விரைவில் வெப்சைட்டில் வெளியிடப்படும் என்றார்.