சென்னை: “அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கிடைத்ததற்கு மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டம் தான் காரணம்” என்று திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார். சென்னையில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு நேற்று அளித்த பேட்டி: திமுக என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல தொடர்ந்து, தன்னுடைய பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறது. அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது. நிச்சயமாக தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆற்றல் இருக்கும்.அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு என்று அறிவித்தார்கள். 5 அமைச்சர்கள் கவர்னரை சென்று பார்த்தார்கள். அப்போது கவர்னர் அந்த மசோதாவுக்கு கையெழுத்து போடவில்லை. எப்போது கையெழுத்து போடுகிறார்.
எப்போது இவர்கள் அரசாணை வெளியிடுகிறார்கள் என்றால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்திய பிறகுதான். போராட்டத்தின் மறுநாள் அரசாணை வெளியிடுகிறார்கள். அதற்கு மறுநாள் கவர்னர் கையெழுத்து போடுகிறார். இப்போது 7.5 சதவீத இடஒதுக்கீடு முதல்வர் எங்கள் இதயத்தில் உதித்த திட்டம் என்கிறார். அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திமுக தலைவர் நடத்திய போராட்டம்தான் காரணம். திமுக கவனிக்காமல் இருந்தால் இன்றளவுக்கு நிறைவேறியிருக்காது என்பது எங்களின் கருத்து. 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் எங்கள் தலைவர் சொல்கிறார். தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட காரணத்தால் காங்கிரசின் கருத்து எதிர்கருத்தாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.