சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: திமுகவின் தேர்தல் பணிகளை தடுக்கும் நோக்கத்துடன்தான் கொரோனா கட்டுப்பாடுகள் என்ற திரைமறைவுக் கட்டுப்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தொடர்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது. உதயநிதி கைது செய்யப்பட்டாலும், இந்த பரப்புரை பயணம் நிற்காது. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதன் மூலமாக திமுகவின் செயல்பாட்டை தடுத்து விடலாம் என்று எடப்பாடி அரசு கருதுமானால் அது, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே மக்கள் மன்றத்தில் தனிமைப்படுத்தப்பட்டு விடும் என எச்சரிக்கிறேன். பரப்புரை பயணத்துக்கான முறையான அனுமதியை அரசும், காவல்துறையும் தர மறுக்குமானால் தடையை மீறி திமுகவின் பிரசார பயணம் தொடரும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.