×

இந்தியாவுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி உற்பத்தி: :ரஷ்ய அதிபர் புடின் பேச்சு

மாஸ்கோ, :ரஷ்யா கண்டுபிடித்துள்ள ‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசி, இந்தியா மற்றும் சீனாவில் உற்பத்தி செய்யக் கூடும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.பிரிக்ஸ் கூட்டமைப்பின் 12வது உச்சி மாநாடு ரஷ்ய அதிபர் புடின் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீனப் பிரதமர் ஜின்பிங், பிரேசில் அதிபர் ஜெயர் போல்சோனாரோ மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர் பங்கேற்று பேசினர்.இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன்னரே தொற்று நோய்களுக்கான தடுப்பூசிகளை கண்டறியும் முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிகளை, பிரிக்ஸ் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 5 நாடுகளும் சேர்ந்து மேற்கொள்ள வேண்டும் என நாம் ஒருமனதாக முடிவு செய்தோம். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நண்பர்கள் இந்த விஷயத்தை அப்போது முன்னிறுத்தினர்.

தற்போது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 வைரசுக்கான தடுப்பூசி ‘ஸ்புட்னிக் வி’யை, கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. அதை முறைப்படி பதிவு செய்துள்ளோம். இந்த தடுப்பூசிகள் அதிக எண்ணிக்கையில் தயார் செய்ய வேண்டும். எனவே இந்தியா மற்றும் சீனாவில் இந்த தடுப்பூசிகளை உற்பத்தி செய்யலாம். இந்த விஷயத்தில் இரு நாடுகளுடனும் இணைந்து செயல்பட ரஷ்யா தயாராக உள்ளது.
ரஷ்யாவின் நேரடியான முதலீட்டு நிறுவனம் இந்தியாவுடனும், பிரேசிலுடனும் இந்த தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளது. இதே போல் சீனாவுடனும், அங்குள்ள மருந்துக் கம்பெனிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியா மற்றும் சீனாவில் இந்த தடுப்பூசிகளை தயார் செய்தால், இந்த நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, சிறிய நாடுகளுக்கும் விரைந்து இந்த தடுப்பூசிகளை விநியோகம் செய்ய முடியும்.

ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசி, நல்ல பலன்களை கொடுத்துள்ளது. என்னுடைய மகளுக்கு அந்த தடுப்பூசி போட்டு, பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது முழு நலமாக உள்ளார். இந்த தடுப்பூசி 92 சதவீத பலன்களை அளிக்கிறது என்று ரஷ்யாவின் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த வாரம் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரிக்ஸ்  கூட்டமைப்பில் உள்ள 5 நாடுகளில் உலக மக்கள்தொகையின் 50 சதவீதம் பேர்  உள்ளனர். எனவே இந்த நாடுகளுக்கு தடுப்பூசிகளை விரைந்து விநியோகம் செய்தால்,  உலகில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது. மேலும் பல நாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால்  கொரோனாவின் 2ம் அலை துவங்கும் அபாயம் உள்ளது. 2ம் அலை துவங்கினால் உலகின்  ஒட்டுமொத்த பொருளாதாரம் பலத்த அடி வாங்கும் மேலும் உயிர்ப்பலிகள்  அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

5 நாடுகளில் ஆராய்ச்சி நிறுவனம்
புடின் திட்டம்

பிரிக்ஸ்  நாடுகளின் சார்பில் தடுப்பூசிகளுக்காக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை துவக்க  வேண்டும் என்றும், அதன் கிளைகள் இந்த கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள 5  நாடுகளிலும் செயல்பட வேண்டும் என்ற யோசனையையும், இம்மாநாட்டில் ரஷ்ய அதிபர்  விளாடிமிர் புடின் முன் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,  ‘‘பரிசோதனை கட்டத்திலேயே இந்த மருந்து 92 சதவீதம் பலனளிக்கக் கூடியது என  தெரிந்து விட்டது என்று நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட டிரஸ்ட்  தெரிவித்துள்ளது. இதையடுத்து கடந்த செப்டம்பரில் இந்திய ஆராய்ச்சி நிறுவனம்  டாக்டர் ரெட்டிஸ், தடுப்பூசி தயாரிப்பிலும், விநியோகத்திலும் ரஷ்யாவுடன்  பங்குதாரராக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்  அடிப்படையில் 10 கோடி எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை ரெட்டிஸ் நிறுவனம்  தயாரிக்க அனுமதி பெற்றுள்ளது.

Tags : Corona ,Vladimir Putin ,Russian ,India , India, Corona, Vaccine, Production
× RELATED கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த தேர்தல் மீண்டும் ரஷ்ய அதிபராகிறார் புடின்