நெல்லை: ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா. இவர் ஆலங்குளத்தில் தங்கி கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை 8.30 மணிக்கு நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவ இயக்குநர் முகம்மது அராபத் வெளியிட்ட அறிக்கையில், பூங்கோதை எம்எல்ஏ சுயநினைவு இல்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். தற்போது அவர் உடல் நிலை திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.