×

கழுத்தை இறுக்கி மனைவி கொலை? கணவன் தலைமறைவு: போலீசார் விசாரணை

பூந்தமல்லி: மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர். பூந்தமல்லி, ரைட்டர் தெருவை சேர்ந்தவர் நூரூதீன்(52), பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அசினா பேகம்(42), இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி கணவருடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். வீட்டில் மூன்று பேர் மட்டும் உள்ளனர்.  நேற்று காலை வழக்கம் போல் மகன் அல்டாப் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் தனது தாய்க்கு செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் செல்போனை எடுக்கவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த அல்டாப் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அசினா பேகம் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் அசினா பேகத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  அசினா பேகம் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது கழுத்து இறுக்கப்பட்டும், முகத்தில் காயங்களும் இருப்பது தெரிய வந்தது. மேலும் அவர் கழுத்தை வயரால் இறுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.  அவரது கணவர் செல்போனை வைத்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தலைமறைவாகி உள்ளாரா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா?  என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

தற்போது சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே வழக்கு மாற்றப்படும்.  தலைமறைவாக நூரூதீன் பிடிபட்ட பிறகே முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள நூரூதீனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.   


Tags : death ,disappearance ,Police investigation , Wife strangled to death? Husband's disappearance: Police investigation
× RELATED அதிர்ஷ்டசாலியாக தேர்வானதாக இ-மெயில்...