சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சி.வி.ராமன் சைன்ஸ் பார்க் கட்டிடம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டு, மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு வார்டு மூடப்பட்டு மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 17ம் தேதி அண்ணா பல்கலைக்கழக ஊழியர் முத்துகுமார் இந்த கட்டிடத்தை சுத்தம் செய்ய வந்த போது, அங்கிருந்த 16 லட்சம் மதிப்புள்ள 41 புரஜக்டர்கள் மாயமாகி இருந்தன.
இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், பல்கலைக்கழக பேராசிரியர் குணசேகரன் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திருடப்பட்ட 41 புரஜக்டர்கள் வைக்கப்பட்டிருந்த அறை முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.