சென்னை: 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூர் மாவட்டம் திருகுவளையில் நாளை திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்குகிறார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக எதிர்க்கட்சியான திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதன்படி கட்சியின் இளைஞரணி செயலாளரும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி, நாளை முதல் 100 நாள் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். இந்த பரப்புரை திமுக முன்னாள் தலைவர் மு. கருணாநிதியின் சொந்த ஊரான திருகுவளையில் தொடங்குகிறது. நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரப்புரையை மேற்கொள்ளும் உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக வருகின்ற 27ம் தேதி சென்னை திரும்புகிறார். தொடர்ந்து நவம்பர் 28ம் தேதி முதல் திருச்சியில் இருந்து அவர் மீண்டும் பரப்புரையை தொடங்குகிறார். திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியும், வரும் 29ம் தேதி சேலத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இருவரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2021 சட்டமன்ற பொது தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவிருக்கின்றனர். தீபாவளி முடிந்து அடுத்த வாரத்தில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என தகவல் வெளியாகியிருந்தது. இந்த சூழ்நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இன்று மாலை விமானம் மூலம் திருச்சி செல்லக்கூடிய உதயநிதி, நாளை காலை கருணாநிதியின் இல்லத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கவிருக்கிறார். இந்த பிரச்சாரத்தின் போது அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய செயலாளர்கள் , மாவட்ட இளைஞரணி மற்றும் திமுக-வின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். குறிப்பாக கிராமந்தோறும் சென்று வீடுவீடாக பிரச்சாரத்தில் ஈடுபட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.