கடலூர்: கடலூரில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜ தலைவர் முருகன் நேற்று கைது செய்யப்பட்டார். 6வது முறையாக அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜக மாநில தலைவர் முருகன் தலைமையில் கடலூரில் நேற்று வேல் யாத்திரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்கு போலீசார் தடை விதித்திருந்தனர். பீச் ரோட்டில் வேல் யாத்திரையை பாஜக மாநில தலைவர் முருகன் தொடங்க முற்பட்ட போது, காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவருடன் நடிகை குஷ்பு உட்பட 700க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே திருத்தணியில் கடந்த 6ம் தேதி வேல் யாத்திரை தொடங்கியபோது முருகன் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து 8ம் தேதி திருவொற்றியூரிலும், 9ம் தேதி செங்கல்பட்டிலும், 10ம் தேதி ஓசூரிலும், 17ம் தேதி திருவண்ணாமலையிலும் கைது செய்யப்பட்ட முருகன் 6வது முறையாக கடலூரில் நேற்று கைதாகியுள்ளார்.