×

கிலோ 2 ரூபாயாக விலை வீழ்ச்சி வெண்டைக்காயை ஆற்றில் கொட்டிய விவசாயிகள்

தேனி: கிலோ 2 ரூபாயாக விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வெண்டைக்காய்களை டிராக்டரில் கொண்டு சென்று ஆற்றில் கொட்டிய சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, பூதிப்புரம், அரைப்படிதேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் வெண்டை விவசாயம் செய்தனர். தற்போது மழைக்காலம் என்பதால் வெண்டைக்காய் அதிக விளைச்சல் ஏற்பட்டது. ஆனால், கேரளாவில் தேவை குறைந்ததால் அதிகம் கொள்முதல் செய்யவில்லை.
எனவே விவசாயிகள் வெண்டைக்காய்களை பறித்து தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கமிஷன் கடைகளுக்கு கொண்டு வந்தனர். அங்கு கிலோ 2 மற்றும் 3-க்கு மட்டுமே விலை போனது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மூட்டைகளிலேயே வெண்டைக்காய்களை தேக்கினர். அவை பழுத்து அழுகின.

இதனையடுத்து நேற்று முன்தினம் கமிஷன் கடைகளுக்கு கொண்டு வந்த வெண்டைக்காய்களை, விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஒரு டிராக்டரில் எடுத்து வந்து முல்லைப்பெரியாற்றில் கொட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேற்று தேனி வட்டாரத்தில் உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து விசாரித்தனர். அப்போது விவசாயிகள், ‘‘வியாபாரிகள் கிலோ ₹2க்கு மட்டுமே கேட்பதால் ெவண்டைக்காய் பறித்த கூலி கூட கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் ஆற்றுக்குள் கொட்டினோம்’’ என்றனர். இதுகுறித்த அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Price fall to Rs 2 per kg In the marrow river Shed farmers
× RELATED கோடை காலத்தையொட்டி மோர் விற்பனை 25% அதிகரிப்பு: ஆவின் நிர்வாகம் தகவல்