சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா சமீபத்தில் தமிழக அரசிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்றும் பல்கலைக்கழகத்திற்கு தேவையான நிதியை நாங்களே திரட்டிக்கொள்கிறோம், மாநில அரசின் தயவு தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும், கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன. மேலும், தமிழக அரசுக்கு எதிராக அரியர்ஸ் தேர்வு விவகாரத்தில் செயல்பட்டது,
அண்ணா பல்கலையில் நடந்த ஆன்லைன் தேர்வை தனியார் நிறுவனம் மூலம் நடத்தி பணம் மோசடி செய்தது, ரூபாய் 700 கோடி ஊழல் புகார் மற்றும் முறைகேடான பணி நியமனங்கள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தபடி உள்ளன.
அதேபோல் ஐஐடியில் பணியாற்றி வந்த அவரது மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டதும் சர்ச்சையானது. இப்படி சூரப்பா மீது அடுக்கடுக்கான புகார்கள் தொடர்ந்து வந்தபடி இருந்தன. இந்நிலையில் தமிழக அரசு சூரப்பா மீதான புகார்களை ஆராய்வதற்கான விசாரணை குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கடந்த 11ம் தேதி அமைத்தது. மேலும் மூன்று மாதங்களுக்குள் சூரப்பா மீதான புகார்களை விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து, நீதிபதி கலையரசன் துணைவேந்தர் சூரப்பா மீது ஆதாரங்களுடன் புகார் தரலாம். புகார் தருபவர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த விசாரணை குழுவில் கூடுதல் பணியாளர்கள் தேவை என்று அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இன்னும் ஓரிரு தினங்களில் கூடுதல் பணியாளர்கள் மற்றும் அலுவலகம் அமைத்த பின்பு விசாரணை தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.