போபால்: மத்தியப் பிரதேசத்தில் பசுக்களை பாதுகாப்பதற்காக பிரத்யேக அமைச்சரவை குழு உருவாக்கப்படும் என முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் பாஜ ஆட்சி செய்கிறது. இம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில், ‘பசுக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக பிரத்யேக அமைச்சகம் உருவாக்கப்படும். கால்நடை வளர்ப்பு, காடு, பஞ்சாயத்து, கிராம மேம்பாடு, வருவாய், வீடு மற்றும் விவசாயிகள் நல துறைகள் பசு அமைச்சரவையின் ஒரு பகுதியாக இருக்கும்.
இந்த அமைச்சரவையின் முதல் கூட்டம் வரும் 22ம் தேதி அகர் மால்வா மாவட்டத்தின் சலரியாவில் உள்ள பசுக்கள் சரணாலயத்தில் நடைபெறும்,’ என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இதுவரை எந்த மாநிலத்திலும் பசுக்கள் மேம்பாட்டிற்காக பிரத்யேக அமைச்சரவை குழு உருவாக்கப்பட்டது இல்லை. நாட்டிலேயே முதல் முறையாக மத்தியப்பிரதேசத்தில் தான் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.