திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் ‘தேக்கடி’ என்றாலே நம் நினைவிற்கு வருவது படகு சவாரிதான். இங்கு சுற்றுலா வருபவர்கள் சுமார் 15 கிலோ மீட்டர் நீளமுள்ள ஏரியில் படகில் சென்று வனத்தின் எழிலை கண்டு ரசிக்கலாம். யானை, புலி, மான் என்று தண்ணீர் குடிக்க வரும் வன விலங்குகளை அவற்றின் இடத்திலேயே பாதுகாப்பாகவும், எந்தவித இடையூறுமின்றி ரசிப்பது தனிச்சிறப்பு. தேக்கடியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து காலை 9.30 மற்றும் பிற்பகல் 3.30 மணி வரை படகு சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இந்த தகவல் அறிந்ததும் தினசரி வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
அதன்படி படகு சேவைகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 7.30, 11.15, 3.30 என்று மாற்றப்பட்டது. தற்போது தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் இருந்து தேக்கடியை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதையடுத்து இன்றுமுதல் தேக்கடியில் படகு சேவை காலை 7.30, 9.30, 11.15, 1.30, 3.30 மணி என்று 5 பயணங்கள் தொடங்கும். தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்ய டிக்கெட் ரூ.385. இத்துடன் வனத்துறையின் பஸ் கட்டணம், நுழைவு கட்டணம் என்று மேலும் ரூ.100 செலுத்த வேண்டும். ஆனால் 10 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதியில்லை.