×

பிரபலமானவர்கள் பலர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளம்பரம் செய்வது மிகவும் வேதனை அளிக்கிறது : நீதிபதிகள் வருத்தம்!!

மதுரை: ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும் என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. சட்டமாக இயற்றப்படுமா? விதியாக அமல்படுத்தப்படுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இணையதள சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது.ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல இளைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். எனவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை விசாரணையின் போது, ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அரசு உரிய முடிவெடுக்கும் என நம்புவதாக தெரிவித்த நிலையில், வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதைத் தொடர்ந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும் என்றும்  சட்டமாக இயற்றப்படுமா? விதியாக அமல்படுத்தப்படுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்படும் என்று முதலமைச்சரும் அறிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய அதிக முக்கியத்துவத்துடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது, என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், பிரபலமானவர்கள் பலர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளம்பரம் செய்கின்றனர். இது மிகவும் வேதனை அளிக்கிறது. சினிமா நடிகர்களை அப்படியே பின்பற்றும் நிலை தமிழகத்தில் உள்ளது.விலைமதிப்பற்ற உயிர்கள் பல ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் பறிபோகின்றன.ஆன்லைன் விளையாட்டுகளால் உயிர்கள் பறிபோவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்றனர்.  


Tags : celebrities ,Judges , Celebrities, Online, Gambling, Sports, Advertising
× RELATED தேர்தலில் வாக்களிப்பதை குடிமக்களின்...