×

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றியுள்ளோம்.. இந்த நாள் எனக்கு மகிழ்ச்சியான நாள் : முதல்வர் பழனிசாமி பெருமிதம்!!

சென்னை : மருத்துவ கலந்தாய்வில் முதல் 18 மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்கினார். தமிழகத்தில் முதல் முறையாக இந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் உள்ள மொத்த இடங்களில் 7.5 சதவீதம்  உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான கவுன்சலிங் இன்று தொடங்கி 20ம் தேதிவரை நடக்கிறது. இந்த நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 18 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளையும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் முதல்வர் பழனிசாமி வழங்கினார். இதனால், பெரும் மகிழ்ச்சி அடைந்த மாணவர்களும் பெற்றோர்களும் கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்ததோடு காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, இந்த நாள் எனக்கு மகிழ்ச்சியான நாள். அரசு பள்ளி மாணவர்களுக்கு நன்னாள். அரசுப்பள்ளியில் படித்தவன் என்கிற முறையில் எனக்கு மனநிறைவை ஏற்படுத்திய நாள். கொள்கை அளவில் நீட் தேர்வுக்கான தமிழக அரசின் எதிர்ப்பு தொடரும். நீட் தேர்வு ரத்து செய்ய கோரி பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன். சட்டப் போராட்டமும் நடத்தி வருகிறோம்.அரசு பள்ளியில் படித்துவரும் மாணவர்களுக்கு மருத்துவக் கனவை நிறைவேற்றியுள்ளோம். நீட் தேர்வை எதிர்கொள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு, வசதி குறைவாக இருந்தது. 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சுமார் 49 சதவீதம் பேர் அரசுப்பள்ளி மாணவர்கள். எனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5சதவீத இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி இந்த சட்டம் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளது. நான் முதல்வரான பொறுப்பேற்றப் பின் தமிழகத்தில் 1,990 மருத்துவ இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன, என்றார்.


Tags : Palanisamy ,government school students , Government School, Students, Chief Palanisamy, Proud
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...