×

சேலத்தில் அதிர்ச்சி சம்பவம் குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி: கடத்திவந்து குடும்பம் நடத்திய வாலிபர் மீது வழக்கு

சேலம்: சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் பசுபதி(25). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 15ம்தேதி நிறைமாத கர்ப்பிணியான சிறுமியை  அழைத்துக்கொண்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். பிரசவ வார்டில் இருந்த டாக்டர் விசாரணையின்போது, சிறுமிக்கு 15 வயது என்றதும்  அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் அதே நாளில்(15ம் தேதி)  சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இது சுகப்பிரசவமாகும். இந்த தகவலை அறிந்த அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடம்  வந்து அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.அப்போது பரபரப்பு தகவல் வெளியானது. வாலிபர் பசுபதி, ஈரோட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது 15 வயதே ஆன சிறுமியுடன் பழக்கம்  ஏற்பட்டுள்ளது. பலமுறை சிறுமியை ஏமாற்றி அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் பசுபதியை  அழைத்து கண்டித்தனர்.

இதனால் கடந்த 20.8.2019 அன்று சிறுமியை கடத்திக்கொண்டு பசுபதி ஓட்டம் பிடித்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு  வந்து திருமணம் செய்துள்ளார். அங்கேயே சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். பின்னர் சேலம் சன்னியாசி குண்டுக்கு அழைத்து வந்து தனியாக  வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். அப்போது அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பசுபதி மீது குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தற்போது சிறுமியுடன் கணவரான பசுபதி  மருத்துவமனையில் இருந்து கவனித்து வருகிறார். இவர்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத இரு குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். பசுபதியை உடனடியாக கைது செய்வதா? அல்லது சிறுமி டிஸ்சார்ஜ் ஆன பிறகு கைது செய்வதா? என்பது குறித்து போலீசார்  ஆலோசனை நடத்தி  வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Salem , Shocking incident in Salem 15-year-old girl giving birth to a child: abducted by family The case against Valipar
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...