பொன்னேரி: பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில், ஆற்றை கடக்க முயன்ற தனியார் வேன், வெள்ளப்பெருக்கில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக அதில், பயணம் செய்த தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் ஏராளமான பெண்கள், இளைஞர்கள் கும்மிடிபூண்டி, அம்பத்தூர், காட்டுப்பள்ளி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள பல்வேறு தனியார் கம்பெனிகளில் பணியாற்றுகின்றனர். இவர்களை அழைத்து செல்ல தனியார் வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன. ஒவ்வொரு கிராமமாக சென்று பல்வேறு தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றி கொண்டு, வேன் செல்வது வழக்கம். இந்நிலையில் பழவேற்காடு பகுதியில் பணியாற்றும் 20க்கு மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றி கொண்டு தனியார் வேன் புறப்பட்டது.
புதிய செஞ்சியம்மன் நகர் - டாக்டர் அம்பேத்கர் நகர் இடையே உள்ள ஆற்றை கடந்து சென்றபோது, கடந்த 2 நாட்களாக பெய்த மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வேன் திடீரென வெள்ளத்தில் சிக்கி கொண்டது.பள்ளத்தை நோக்கி வாகனம் அடித்து செல்ல முற்படும்போது, வாகனத்தில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்தபடி கீழே இறங்கி ஆற்றில் நீந்தி கரையை கடந்தனர். இதை பார்த்ததும், கிராம மக்கள் ஓடிவந்து, வேன் ஆற்றில் மூழ்கிவிடாதபடி தாங்கி பிடித்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இப்பகுதியில், தொழிலாளர்களை அழைத்து செல்லும் வாகன ஓட்டுநர்கள், இதுபோன்று ஆபத்தான சூழலில் உயிர் பயமறியாமல் வாகனங்களை இயக்குவது வாடிக்கையாகி வருகிறது. அதேநேரத்தில், அஜாக்கிரதையாக பயணத்தை மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.