சென்னை: கர்நாடகாவில் இருந்து தனியார் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு 47 பயணிகள், 5 விமான ஊழியர்களுடன் மைசூர் சென்றது. அங்கு சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியதால், விமானத்தை தரையிறக்க முடியவில்லை. இதனால், சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அந்த விமானம் சென்னையில் தரையிறங்க வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். அவர்கள், விமானத்தை தொடர்ந்து வானில் வட்ட மடிக்கச் செய்துவிட்டு, உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.
இதையடுத்து, இரவு 10.30 மணிக்கு விமானம் தரையிறங்கியது. அப்போது விமானத்தின் முன்சக்கரம் திடீரென வெடித்ததால் தறிகெட்டு ஓடியது. இதனால், பயணிகள் அலறி கூச்சலிட்டனர். ஆனாலும் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தினார். இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக கீழே இறக்கப்பட்டு, ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர். விமானி சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 52 பேர் உயிர் தப்பினர். இதுகுறித்து விசாரணைக்கு் உத்தரவிடப்பட்டுள்ளது.