சென்னை: தமிழ்நாட்டில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், கறிக்கோழி நிறுவன உரிமையாளர்களால் தங்களுக்கு வழங்கப்படும் வளர்ப்பு கூலியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், தலைமை செயலகத்தில் நேற்று கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் தமிழ்நாடு கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர், கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர் சங்க பிரதிநிதிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு குறைந்தபட்ச வளர்ப்பு தொகையான ரூ.3.50லிருந்து ரூ.6ஆக உயர்த்தி வழங்கவும், 2,000க்கும் குறைவாக கறிக்கோழிகள் வளர்க்கும் சிறுபண்ணையாளர்களுக்கு கோழி ஒன்றுக்கு ரூ.1 வீதம் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கவும் இரு தரப்பிலும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதுதவிர, நிறுவனங்கள் கொடுக்கும் தீவனம் மற்றும் மருந்துகளை தவிர மற்ற பொருட்களை கறிக்கோழி வளர்ப்புப் பண்ணையாளர்கள் கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்களின் ஒப்புதல் இல்லாமல் பண்ணையில் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.