திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் சென்னையிலிருந்து திருமலைக்கு காரில் குடும்பத்தினருடன் வந்தார். பின்னர், கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கினார். வழக்கமாக முதல்வர் திருமலை வராக சுவாமி மற்றும் ஹயகிரிவர் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால், கொரோனா பரவலை காரணமாக காட்டி ஏழுமலையான் கோயிலை தவிர மற்ற இதர சன்னதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு தேவஸ்தானம் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், முதல்வர் வராக சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி தேவஸ்தான அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, துணை செயல் அதிகாரி ஹரிந்திரநாத் முன்னிலையில் நேற்று முன்தினம் மாலை வராக, ஹயக்ரீவர் கோயிலில் தரிசனம் செய்தார்.
பின்னர், திருமலையில் தங்கி நேற்று காலை விஐபி தரிசன வரிசையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். முன்னதாக வைகுண்டம் கியூ காம்ப்ளக்சிலிருந்து வரிசையில் கோயிலுக்கு வந்த முதல்வரை வாசலில் வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள் கோயிலுக்குள் அழைத்துச்சென்றனர்.
தொடர்ந்து ஏழுமலையானை வழிபட்ட தமிழக முதல்வருக்கு தலைமை செயல் அலுவலர் ஜவகர் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினார். தொடர்ந்து ஏழுமலையான் கோயில் முன் இருக்கும் அகிலாண்டத்தில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து எடப்பாடி பழனிசாமி வழிபட்டார். பின்னர் அங்கிருந்து சென்னை புறப்பட்டார்.