திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 15ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (16ம் தேதி) மண்டல கால பூஜை தொடங்கியது. இதையடுத்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கடும் கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் 41 நாள் தொடரும் மண்டல கால பூஜைகள், டிசம்பர் 26ம் தேதி நடைபெறும் பிரசித்திபெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. பூஜை நடைபெறும் நேரங்களில் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதியில்லை. காலை 5 மணிக்கு நடைதிறந்த பிறகு நிர்மால்யம், கணபதிஹோமம் முடிய 45 நிமிடங்கள் ஆகும். அதன் பிறகு 5.45 மணிக்கு ேமல் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்படுவர். பின்னர் 7 முதல் 9 மணிவரை உஷபூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறும்.
அதுபோல உச்சிகால பூஜைக்கு பின்னர் நண்பகல் 12 மணியளவில் களபாபிஷேகம், மீண்டும் மாலையில் 6 முதல் 7 மணிவரை புஷ்பாபிஷேகம் நடைபெறும். இந்த நேரங்களிலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. வழக்கமாக மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் படிபூஜை நடத்தப்படாது. இந்த ஆண்டு பக்தர்கள் அதிகம் வராததால் படிபூஜை நடத்தப்படுகிறது. ஆனால், இரவு 8 மணிக்குமேல் பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் சன்னிதானத்தில் இருந்து வெளியேறிவிட வேண்டும். அதேபோல் 7 மணிக்கு மேல் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். கூட்டம் இல்லாததால் ேகாயில் வளாகத்தில் உள்ள மேல்பாலம் வழியாக பக்தர்கள் செல்ல தேவையில்ைல. கொடி மரத்தின் வலது பகுதி வழியாக சென்று நேரடியாக தரிசனம் செய்யலாம்.